புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்குச் செல்ல முடிவு செய்ததும் துணைக்கு யாரை அழைத்துச் செல்வதென்று ஒரே யோசனை. அப்போதுதான் இந்த வருடம் ஜூன் மாதத்தில் வேலூரில் விசு சாரின் “விசுவாசமின் சகவாசம்” நூல்வெளியீட்டின் போது அறிமுகமான வேலூர் வலைப்பதிவர் அன்பே சிவம்
http://sivasakth.blogspot.in
அவரை கேட்டுப்பார்க்கலாம் என்றிருந்தேன். ’வேலூர் வழியாகச் செல்வதாக இருந்தால்’ உடன் வருவதாகச் சொன்னார். உம் அதற்கு மேல் என்ன வேண்டும்.
திருப்பதியில் இருந்து வேலூர் வழியாக புதுக்கோட்டைக்குச் செல்வதென்று முடிவு செய்யப்பட்டு பயண திட்டம் வகுக்கப்பட்டது. முடிந்தவரை நான் பேருந்துப் பயணம் தவிர்ப்பதால், திருப்பதியில் இருந்து காட்பாடி வரை தனியாகவும், அங்கிருந்து இருவரும் திருச்சி வரை ரயிலில் சென்று பேருந்து வழியாக புதுக்கோட்டைக்குச் செல்வதுதான் எங்களது திட்டம்.
புதுக்கோட்டைக்கு புறப்படவேண்டிய நாளான சனிக்கிழமை அக்டோபர் 10 வந்தது. முதலில் இங்கிருந்து காட்பாடிச் செல்ல மும்பை கன்னியாகுமரி ரயிலில் மாளை மூன்றரை மணிக்கு ஏறினேன். திருப்பதி காட்பாடி 105கிமி தூரம் என்றாலும் முன்பதிவு செய்திருந்ததால் பத்து நிமிடத்திற்கு முன்புதான் வீட்டில் இருந்து புறப்பட்டேன். வண்டியில் ஏறியதும் முழுக்க ஹிந்தி வாடைதான். நல்ல வேளை எனக்கு எதிரில் ஒரு தமிழர் இருந்தார். ராணுவத்தில் பணியாற்றுபவர். விடுமுறைக்காக வீட்டிற்குச் செல்கிறார். அவருடன் பேசத்துவங்கியதும் நேரம் போனதே தெரியவில்லை.
1999 கார்கில் யுத்த அனுபவம், ஜம்முவில் அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சூடு, சென்னை ஆவடியில் இருக்கும் டெங் தொழிற்சாலைப் பற்றி எங்களது பேச்சு இருந்தது. நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார். அன்று பார்த்து ரயிலும் அரை மணி நேரம் முன்பாகவே காட்பாடியை அடைந்திருந்தது. மாலை ஐந்தரை மணிக்கு காட்பாடியில் இறங்கியாச்சு. சிறிது நேரத்தில் அன்பே சிவம் வந்துவிட்டார். இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருந்தாலும் அதிகம் பேசிக்கொண்டது கிடையாது. இரவு எட்டு பத்துக்குதான் எங்கள் வண்டி என்பதால் நாட்டு நடப்பு, பதிவுலக சமாச்சாரங்கள் பற்றி இருவரும் காட்பாடி ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்தோம்.
காட்பாடியில் இருந்து திருச்சி வரை நாங்கள் பயணிக்க வேண்டிய காச்சிகூடா-மதுரை விரைவு வண்டி இருபது நிமிடங்கள் தாமதமாக இரவு எட்டரை மணிக்கு வந்தது. வண்டியில் ஏறியதும் இரவு உணவை முடித்துவிட்டு கையோடு அதிகாலை 3.45மணிக்கு நாங்கள் திருச்சியில் இறங்க வேண்டும் என்பதால் மூனரை மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்தாச்சு.
சரியாக வண்டியும் அதிகாலை 3.45மணிக்கு திருச்சி ஜெங்ஷனை அடைந்தது. வண்டியை விட்டு இறங்கும்போதுதான் அந்த அறிவிப்பை கேட்டேன். ‘சென்னையில் இருந்து மானா மதுரை வரைச் செல்லும் சிலம்பு விரைவு வண்டி ஏழாவது தடத்தில் வந்துக்கொண்டிருப்பதாக’. திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் செல்வதுதான் எங்களது திட்டம். சிலம்பு வண்டி அறிவிப்பைக் கேட்டதும். ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் பதற்றம். ’ எவ்வளவு நிமிடங்கள் வண்டி திருச்சியில் நிற்கும் தெரியாது. ஒரு வேளை டிக்கெட் வாங்கி நாங்கள் ஏழாவது தடத்திற்குச் செல்வதற்குள் வண்டி புறப்பட்டால் ராமேஷ்வரம் வண்டி வரும் வரை அடுத்த 2 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற யோசனையோடு டிக்கெட் கவுண்டருக்குச் சென்று டிக்கெட் வாங்கி வேகமாக ஏழாவது மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
சிலம்பு வண்டியில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் காலியாக இருந்ததால் உட்காந்துச் செல்ல இடமும் கிடைத்துவிட்டது. ’எத்தன மணிக்கு வண்டி புறப்படும்ங்க’ எதிரில் இருப்பவரிடம் கேட்டதற்கு ’நான்கு மணிக்கு’ சொன்னார். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அன்று சிலம்பு வண்டி அரைமணி நேரம் தாமதம் என்பதால் அதிகாலையில் திருச்சியில் மறக்க முடியாதொரு அனுபவம். பாவம் அன்பே சிவம் சார் தான் கொஞ்சம் பயந்திருப்பார் :) .
இப்படிதான் ஒருமுறை திருப்பதியில் இருந்து சென்னைக்கு போகும்போது அரக்கோணத்தில் ஒரு அனுபவம். படிக்க.
http://www.tirupatimahesh.blogspot.com/2014/06/blog-post_11.html
45 நிமிடத்தில் புதுக்கோட்டையை அடைந்தோம். ‘சென்னையில் இருந்து பதிவர்கள் யாராச்சும் இந்த வண்டியில் வந்திருக்கலாம்’னு வண்டியை விட்டு இறங்கி நடை மேடையில் நடக்கும்போது கேட்டேன். நாங்கள் வெளியே வரும் வரை யாரையும் கானோம். முக்கியமான ரயில் வரும் சமயத்தில் புற நகர் பேருந்து சர்விஸ் இயக்கப்படும் என முத்து நிலவன் சாரின் ஒரு பதிவில் படித்த ஞாபகம்.
பேருந்தைத் தவிர எல்லாம் ஆட்டோக்கள்தான். ’கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம் பெருந்துக்காக சார்’ சொல்வதற்குள் ஆட்டோவில் ஏறச்சொன்னார். 15 நிமிடங்களில் விழா நடக்கும் அரங்கை அடைந்தோம்.
அடுத்த நாள் 12/10/2015 காட்பாடியில் என்னை திருப்பதி ரயில் ஏற்றும் வரை என்னோடு, என்னுடன், என்னைப் பற்றி நன்கு புரிந்துக்கொண்டவரைப்போல் அனைத்து உதவிகளையும் செய்து புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் நான் கலந்துக்க மற்றும் பயண திட்டத்தை வெற்றி அடையச் செய்த பதிவர்-அன்பே சிவம் சாருக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் குறைவுதான்.
---
தொடரும்.