வாழ்வில் முதல் சம்பளம் வாங்கி பத்து நாள் ஆகி விட்டது. நேற்றுதான் முதல் செலவை செய்தேன். இத்தனை நாட்களாக ‘முதல் சம்பளம் ரொம்ப ஸ்பெஷல் என்ன பண்ணுனே?’னு பலர் கேட்டிருந்தனர். பெரிதாக பதில் ஏதும் சொல்லாமல் நகர்ந்துவிடுவேன்.
பொதுவாக பலரும் முதல் சம்பளத்தை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் அதிகம். நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்கிற நிலையில் முதல் சம்பளத்தை ஏதாவதொரு நற்காரியங்களுக்கு பயன்படுத்தவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தேன். அதன் படி முதல் சம்பளத்தில் ருபாய் பதிமூன்றாயிரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக பரிமாற்றம் செய்திருக்கிறேன்.
அது என்ன கணக்கு பதிமூன்றாயிரம்னு யாராவது நினைக்கலாம். முதலில் திட்டமிட்டபடி முதல் மாத சம்பளம் முழுவதையும் நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பதான் திட்டமிட்டிருந்தேன். என்னை பெற்ற பெற்றோருக்கும் ஏதாவது செய்யனும் என்பதால் என்னுடைய அப்பா அம்மாவுக்கு பாஸ்போர்ட் எடுத்து தர இருக்கிறேன். அம்மாவிடம் வாழ்வில் மறக்க முடியாத சந்தோஷமான தருணங்கள்னு அடுக்கச் சொன்னால் நிச்சயம் அதில் ஒன்றாக நாங்கள் முதன்முறை விமானத்தில் மும்பையில் இருந்து பெங்களூருக்கு பறந்ததைச் சொல்வார்கள். இத்தனைக்கும் அது நடந்து பல வருடங்கள் ஆனாலும் அந்த அனுபவம் தந்த திருப்தி இருக்கிறதே வாழ்நாள் முழுவதும் அவர்களால் மறக்க முடியாத ஒன்று. அது மாதிரி சீக்கிரம் மறக்க முடியாத அனுபவத்தை என்னை பெத்தவங்களுக்கு நிறைய தரணும் என்பது என்னுடைய லச்சியங்களில் ஒன்று.
அதேமாதிரி எனக்கும் ஒரு சில தனிபட்ட லச்சியங்களும் இருக்கு. முதலில் நிறைய காசு சம்பாதிக்கனும்; முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவனும்; பிறகு உலகம் முழுவதும் சுற்றுலா போகனும் அவ்வளவுதான். அந்த அனுபவம் கிடைத்தாலே வாழ்ந்த திருப்தியோடு சாக தயார் நான்.
சரி ‘ஏன் நிசப்தம் அறக்கட்டளைக்கு நன்கொடை?’ யாராவது நினைக்கலாம். நிசப்தம்.காம் இணைய தளத்தை பற்றி தெரியாமல் பலரும் இருப்பர் அவர்களுக்காக எழுதிவிடுகிறேன்.
சாதாரண ஒரு வலைப்பதிவராக எழுத ஆரம்பித்து வாசகர்கள் மணிகண்டன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக பெரும் தயக்கத்திற்கு பிறகு சிறிய அரகட்டளையாக அவர் ஆரம்பித்து அறக்கட்டளைக்கு உலகெங்கிலும் இருக்கும் நிசப்தம் வாசகர்கள் நிதியை லட்சங்களில் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனை தகுதியான பயனாளிகளிடம் சேர்க்கும் கடமை வா.மணிகண்டன் அவருடையது. ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அவர் ஆச்சர்யம் ஊட்டும் மனிதர். குடும்பம், வேலை, தினமும் பதிவுகள் என எல்லாவற்றையும் சரிசமமாக பேலன்ஸ் செய்வதை பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது நாளுக்கு நாள் தன்னார்வலர்கள் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு வருவது நல்ல விஷயம்.
இன்றோடு நிசப்தம்
வலைப்பதிவு தொடங்கி பனிரெண்டு வருடங்கள் முடிந்து பதிமூன்றாம் வருடத்தில் அடிவைக்கிறது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் வெறும் வாழ்த்துச் செய்தியை மட்டும் அனுப்புவதுண்டு. எத்தனையோ வாசகர்கள் அறக்கட்டளைக்கு எவ்வளவோ செய்துக்கொண்டிருக்கிறார்கள். ’நம்மால் எதையும் சேய்ய முடியலியே’ என்கிற ஏக்கம் எனக்கு இருந்ததுண்டு. என்னுடைய இந்த சிறிய செயல் வா.மணிகண்டன் சாருக்கு உத்வேகம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் அனுப்பி இருக்கிறேன். கூடவே முதல் சம்பளத்தில் ஒரு பகுதி நற்க்காரியங்களுக்கு பயன்பட இருப்பதால் முழு திருப்தியும் உண்டு. தொடர்ந்து நிசப்தம் சப்தத்தோடு தொடர வாழ்த்துக்கள்.