ஆகஸ்ட் 17. வியாளக்கிழமை காலையில் எழுந்ததும் ‘இன்னைக்குதான் சிங்கப்பூர்ல இருக்க போற கடைசி நாள். இரவு ஊர் திரும்பணும்’ என்கிற நினைவு ஞாபகம் வரவும் சிறு பிள்ளை மாதிரி ஓவென்று அழணும்னு தோணிச்சு.
அன்று இரவே ஊர் திரும்புவதால் தயாராகி பைகளை பேக் செய்து பைகளை ரிசப்ஷன் பகுதியில் வைத்துவிட்டு அறையை செக்கவுட் செய்து விட்டோம். விடுதியை விட்டு வெளியே வந்து பத்து நிமிடம் நடந்து முஸ்தப்பா ஷாப்பிங் மால் நோக்கி நடக்க ஆரம்பிச்சோம். அன்றைய தினம் நாள் முழுவதும் ஷாப்பிங்காக ஒதுக்கி இருந்தோம். இரவு பதினோரு மணிக்கு சென்னைக்கு ஃப்லைட்.
சிங்கப்பூர்ல ஷாப்பிங்னா முதல்ல அனைவருக்கும் நினைவிற்கு வருவது முஸ்தப்பா செண்டர்தான். குறைந்த விலையில் அங்குதான் நமக்கும் உறவினர்களுக்கும் பொருட்கள் வாங்க ஏற்ற இடம். 24/7 இயங்குவதால் மக்கள் நடமாட்டம் எப்போதும் இங்கு உண்டு. சிங்கப்பூருக்கு வந்த முதல் நாள் இரவே நானும் தம்பியும் இங்கு வந்து ஒரு சுற்று சுற்றி சென்றதால் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தோம்.
வெளிநாட்டுக்குச் சென்று திரும்பும் பெரும்பாலானவர்கள் அன்பளிப்பாக உறவினர்களுக்கு ஃபாரின் சாக்லேட் மற்றும் செண்ட் கொடுப்பது பழக்கம். அந்த வரிசையில் நாமும் வெளி நாட்டுக்கு போய் வந்திருக்கிறோம் என்பதை நம் மக்கள் மனதில் /வரலாற்றில் பதிய வேண்டும் என்பதால் முதலில் சாக்லேட் வாங்கிடலாம்னு சாக்லேட்ஏரியாவுக்கு போனோம்:)
2சிங்கை$ முதல் பத்து, இருவது$ வரை பல வகைகளில் சாக்லேட் கிடைக்கிறது. விலையை பொருட்படுத்தாமல் பெயர் தெரியாட்டியும் பிடித்த சாக்லேட் பாக்ஸ் எடுத்து ட்ராலியில் எடுத்து போட்டுக்கொண்டோம். சாக்லேட் முடிஞ்சதும் அடுத்து செண்ட் வாங்க சென்றோம். அங்கும் அதே கதைதான். செண்ட் அடிச்சு பழக்கம் இல்லாததால் நல்ல பேக்கிங்க்ல இருந்த செண்ட் எடுத்து ட்ராலில எடுத்து போட்டுக்கொண்டோம். 3$ல இருந்து செண்டின் விலை ஆரம்பிக்கிறது. அது முடிச்சதும் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க உள்ளே ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தோம். மாலினுள் நீங்கள் நடக்க நடக்க வந்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன கிடைக்கும் என்பதை லிஃப்டில் ஒட்டி இருப்பார்கள். அதை பார்த்து விட்டு தேவையானவற்றை வாங்க திட்டமிட்டால் எளிதாக இருக்கும். ஷாப்பின் விரும்புவர்களுக்கு அரை நாள் நிச்சயம் போதாது. ‘இனி முஸ்தப்பால போதும்’னு தோணியதும் பில் போடும் இடத்திற்கு வந்து பில் போட்ட போதுதான் தெரிந்தது நாங்கள் 517சிங்கப்பூர் $க்கு பொருட்கள் வாங்கி இருக்கிறோம் அப்படினு. நம்ம ஊர் ரூபாய்க்கு 25,000. காச பத்தி கவலை படாம ட்ராவல் கார்ட் மூலம் பெய்மெண்ட் செய்தோம். சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளுக்கு ஜீஎஸ்டி இல்லாததால் பொருட்கள் வாங்கும் போது வரி செலுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில் சிங்கப்பூரில் செலுத்திய ஜிஎஸ்டி வரியை ரிஃபண்ட் பெற முடியும் என்பதால் ஜிஎஸ்டி ரிஃபண்ட் பில் வாங்கி விட்டு வெளியே வந்தோம்.
பொருட்கள் வாங்கும் போது பணத்த பத்தி கவல படல ஆனா வெளிய வந்ததும் வாங்கின பொருட்களை எப்படி ஊருக்கு கொண்டு போவதுதான் பெரும் குழப்பமா இருந்திச்சு. ட்ராலியில் இருந்து எடுத்த பொருட்களை பில் போட்டு ஒரு பெரிய கவரில் கட்டி கொடுத்து விட்டிருந்தார்கள். அதை அப்படியே கொண்டு போக முடியாது என்பதால் முதலில் பேக்கிங் செய்ய வேண்டும். வெளியே வந்ததும் அங்கு பணி புரியும் ஒரு தமிழரிடம் உதவி கேட்டு பெரிய அட்டை பெட்டி ஒன்றை வாங்கி அதில் வாங்கிய பொருட்களை அடுக்கி கெட்டியாக கட்டி முஸ்தஃபாவில் நுழைவாயிலில் உள்ளே போவர்கள் கொண்டு வந்த பொருட்களை கொடுத்துவிட்டு செல்லும் இடத்திற்கு சென்று எங்களோட பெட்டியை கொடுத்துட்டு பக்கத்தில் இருக்கும் சரவண பவனில் சாப்பிட சென்றோம்.
ஃபுல் மீல்ஸ் நான்கு பேருக்குச் சேர்த்து 37.5$ஆச்சு. மதிய உணவு முடிச்சதை அடுத்து ’சிங்கப்பூரில் தங்கம் விலை நம்ம ஊரைவிடவும் குறைவு என்பதால் அதையும் பார்த்து விடலாம்’னு லிட்டில் இந்தியாவில் பிரபலமான தங்க கடைக்குச் சென்றோம். சிங்கப்பூர் பொருத்தவரையில் வாங்கும் நகைக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. அதோடு வாங்கும் நகைக்கு செலுத்தும் ஜிஎஸ்டி வரி ரிஃபண்ட் பெற முடியும் என்பதால் சிங்கப்பூரில் நகை எடுப்பது நமக்கு லாபமாகதான் இருக்கும்.
நகை கடையை விட்டு வெளியே வந்து லிட்டில் இந்தியாவில் தெருவோரக் கடைகளில் ஏறி இறங்கி சில பொருட்களை வாங்கினோம். அசல் டீநகர்தான் நினைவு படுத்தியது. பெரும்பாலான கடைகளில் தமிழர்கள்தான் பணி புரிகிறார்கள். நேரம் தெரியாமல் பர்ச்செஸ் செய்துகிட்டு இருக்க தூரல் வந்து எங்களை நிறுத்தியது. நேரம் அப்போது பார்த்தால் ஐந்தரை ஆகி இருந்தது. லேசான தூரலுக்கு ஒதுங்கி நின்ற எங்களை இடத்தை விட்டு நகர விடாமல் அரை மணி நேரத்திற்கு விடாமல் மழை கொட்டி தீர்த்தது. மழை நின்றதும் முஸ்தஃபா சென்று மதியம் கொடுத்திருந்த பெட்டியை வாங்கினோம். அங்கிருந்து தங்கி இருந்த விடுதிக்குச் சென்று எங்களோட பைகள் வேறு எடுத்துக்கொண்டு வரணும் என்பதால் அங்கிருந்து விடுதி நோக்கி நடக்க ஆரம்பிச்சொம்.
பதற்றமான க்லைமெக்ஸ்:
எங்கள் நான்கு பேருக்கும் சேர்த்து விமானத்தில் செக்கின் லக்கேஜோ வெறும் 25கிலோதான். ஷாப்பிங் பொருட்கள்+எங்களோட பைகள் சேர்த்து பார்க்கும்போது அதிக எடை இருக்கிறது. ’என்ன செய்ய போகிறோமோ’னு அந்த சமயம் பதற்றம் ஆரம்பிச்சிடுச்சு. கடைசி நிமிடத்தில் எக்ஸ்ட்ரா லட்கேஜ் எடைக்கு இவ்வளவு டாலர்னு நிறைய ச்சார்ச் செய்வார்கள் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் இருந்தோம். ஷாப்பிங் பொருட்கள் மட்டுமே இரண்டு அட்டை பெட்டிகள். தவிர எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பை. இந்தியாவிற்கு இல்ல ஏர்போர்ட் வரை ஆச்சும். ‘இதை எப்படி தூக்கிட்டு ஏர்போர்ட் வரை போகபோறோமோணு ஒரே பதற்றம்.சிங்கப்பூரில் வந்த இரண்டாவது நாளே கையில் எங்களிடம் ரொக்கமாக கொண்டு வந்த டாலர்ஸ் தீர்ந்து விட்டதூ. தேவை பட்ட இடத்தில் எல்லாம் ட்ராவல் கார்ட்தான் பயன்படுத்திகிட்டு வந்தோம். அன்றைய தினம் முஸ்தஃபா தவிர தெரு ஓர கடைகளில் பொருட்கள் வாங்க ஒரு 200 டாலர்ஸ் தனியாக எடிஎம் வழியாக வித்ட்ரா செய்து வைத்திருந்தோம். அதுவும் தீர்ந்திருந்தது. எங்களிடம் 500$வரை காசு ட்ராவல் கார்டில்தான் இருக்கிறது.
பொருட்களை தூக்கிட்டு போக முடியாது என்பதால் டாக்சி பிடித்து போக நினைத்தாலும் இறங்கும் போது கையில் பணத்தை கேட்டால் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டே விடுதிக்கு வந்து ரிசப்ஷன் பகுதியில் வைத்திருந்த பைகளை எடுத்துக்கும்போது இரவு ஏழாகி இருந்தது. 11 மணிக்கு விமானம் புறப்படும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செக்கின் செய்திருக்க வேண்டும் என்பதால் எதை பற்றியும் யோசிக்காமல் இனியும் தாமதித்தால் சரி படாதுனு மெட்ரோவில் சாங்கி செல்ல முடிவு செய்தோம். மேட்ரோ ஏற போனால் அங்கும் பிரச்சனை. மாலை நேரம் என்பதால் ட்ரைனில் கூட்ட நெரிசல். அதிலும் ஒவ்வொரு இண்டர் சேஞ்லையும் ட்ரைனில் ஏற நீண்ட வரிசை. இரண்டு மூன்று ட்ரைன் விட்ட பிறகுதான் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு ட்ரைனில் ஏற வாய்ப்பு கிடைச்சது.
நேரம் ஆக ஆக உள்ளுக்குள் செக்கின் லக்கேச் நினைத்து பயம் அதோடு நேரத்திற்கு செக்கின் செய்து விடுவோமானு ஒரே குழப்பம். சரியா எட்டரை அளவில் சாங்கி விமான நிலையத்தில் ஸ்கூட் நிறுவனத்தின் செக்கின் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். செக்கின் லக்கேசாக அனுப்ப முடிவு செய்திருந்தவற்றை முதலில் தனியாக நாங்களே எடை போட்டு பார்த்தபோது 30கிலோவையும் தாண்டி இருந்தது. விமானத்திலோ செக்கின் லக்கேசாக 25கிலோ வரைதான் எங்களுக்கு அனுமதி .
’எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’னு தைரியத்தில் செக்கின் செய்யும் இடத்திற்குச் சென்று ச்செக்கின் லகேச் மட்டும் செக்கின் செய்பவரிடம் கொடுத்தபோது எடை பார்த்தபோது 30கிலோவை காட்டியது. ’எடை குறைத்துவிட்டுவா’னு அவர் திருப்பி அனுப்பி விட்டார். ஏற்கனவே ச்செக்கின் லகேச் நினைச்சதோட வெயிட் அதிகமா இருந்ததால்தான் அதுல இருந்ததை எடுத்து எங்களோட பைகளில் போட்டு திணிச்சிருந்தோம். இப்போ ச்செக்கின் அதிகாரி வேற எடை குறைக்க சொன்னதால மீண்டும் அதுல இருந்து சிலவற்றை எடுத்து மேலும் திணிச்சு அவரிடம் ச்செக்கின் லகேச் போய் கொடுத்தால் 27கிலோ காட்டியது. ’ஐய்யோ மீண்டும் திருப்பி அனுப்பிவிடுவாரோ’னு பயந்துக்கொண்டிருக்க இம்முறை எதுவும் சொல்லாமல் 25கிலோ என எழுதி செக்கின் லக்கேஜ் விமானத்திற்குள் ஏற்ற டேக் போட்டு அனுப்பிவிட்டார். அப்போதுதான் போன உயி பாதி வந்தது.
செக்கின் செய்து போர்டிங் பாஸ் வாங்கியதை அடுத்து இமிக்ரேஷன்காக போய் வரிசையில் நின்றோம். சிங்கப்பூரில் நுழையும் போது செய்த மாதிரி ஃபார்மாலிடிஸ் செய்து நாட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதற்கான முத்திரை பாஸ்ப்போர்டில் குத்தி கொடுத்தார். அதன் பிறகு அங்கே இருந்த ஜிஎஸ்டி ரிஃபண்ட் கவுண்டருக்குச் சென்று நாங்கள் சிங்கப்பூரில் வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் பெற்ற ஜிஎஸ்டி ரிஃபண்ட் பில் கொடுத்து டாலர்ஸ் பெற்றோம். முஸ்தஃபாவில் வாங்கிய பொருட்களுக்கு மட்டும் 34 டாலர். அம்மா வாங்கிய நகைக்கு ஜிஎஸ்டி ரிஃபண்ட் தனி கணக்கு.
சிங்கப்பூர் செண்ட்ரல் பேங்ல இருந்து நேரா டாலர்ஸ் பிரிண்ட் செய்து கொண்டு வந்திருப்பார்கள் போல என்னவோ. ஒவ்வொரு நோட்டும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷா வளவளப்பா இருந்திச்சு. ஜிஎஸ்டி ரிஃபண்ட் பெற்றதை அடுத்து கஸ்டம்ஸ் மற்றும் செக்யூரிடி பரிசோதனைக்காக சென்றோம். ச்செக்கின் லக்கேச் தலவலியில இருந்து இப்போ ஹேண்ட் லகேச் தலைவலிக்கு பிரச்சனை மாறிடுச்சு. ஹெண்ட் லக்கெஜ் ஏழு கிலோ வரை விமானத்திற்குள்ளே எடுத்துச் செல்ல அணுமதி உண்டு. எங்களோட பைகளை வாங்கி வெயிட் பார்ப்பார்களோனு இருந்தது.
ஒவ்வொரு பையிலும் பொருட்கள்+எங்களோட துணிகள் சேர்த்தா குறைந்தது 15கிலோ ஆச்சும் தேறும். அப்படியேதும் பார்க்காமல் எப்போதும் போல் அவர்கள் வேலை செய்து அனுப்பி விட்டார்கள். இனி விமானத்திற்குள் ஏற வேண்டியதுதான் மிச்சம்.
விமானத்திற்குள் நுழைய வரிசையில் நின்ற போது சிலர் பெரிய ட்ராவல் பேக்கையே கொண்டு வந்ததை பார்த்து அந்த பாதி உயிரும் வந்தது. ஏரோ பிரிட்ஜ் வழியாக ஸ்கூட் விமானத்திற்குள் நுழைந்து எங்களோட இருக்கையில் போய் உட்கார்ந்தோம்.
சரியாக சிங்கப்பூர் நேரம் படி இரவு 11 மணிக்கு சுமக்க முடியாமல் வாங்கிய பொருட்களை சுமந்து வந்து விமானத்தில் சேர்க்க ஐந்து நாட்கள் சிங்கப்பூரில் சுற்றிய நினைவுகளை சுமந்துக்கொண்டு இதோ நாங்கள் பயணிக்கும் ஸ்கூட் விமானம் புறப்பட்டு மெல்ல முன்னோக்கி நகரத் தொடங்கியதும், பிரிய மனமில்லாமல் சிங்கப்பூருக்கு பைபை சொன்னோம்.
அன்றைய தினம் ஓய்வின்றி தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்ததால் உடனடியாக உறங்கி விட்டிருந்தோம். ’சென்னைல லாண்ட் ஆக போறோம். சீட் பெல்ட் எல்லாம் போட்டுக்கோங்க’னு அறிவிப்பு வந்ததும் முழிப்பு வந்திடுச்சு. சென்னையில் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் வானில் எக்ஸ்ட்ரா நாலு சுத்து சுற்றி சென்னை விமான நிலையத்தில் பைலெட் விமானத்தை பத்திரமாக இறக்கினார்.
செக்குரிடி, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் முடிச்சு வெளியே வரும்போது அதிகாலை ஒன்னரை ஆகி இருந்தது. எங்களை திருப்பதிக்கு அழைச்சிட்டு போக கார் தயாராக இருந்தது. நான்கு மணி நேர பயணத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னையை வந்தடைந்தோம். இரண்டரை மணி நேர பயணத்தில் சென்னையில் இருந்து கடைசியாக வீட்டை அடைந்தோம்.
சிங்கப்பூர் புரப்படுவதற்கு முன்பு செய்த ஏற்பாடுகளை பற்றி
இந்த
கட்டுரையில் எழுதி இருந்தேன். அதன் பிறகு சிங்கப்பூர் சென்று வந்து சுற்றி வந்த அனுபவத்தை எழுத ஆரம்பிச்சா பாதியிலே நின்னுடுச்சு. ஒரு வருஷம் கழிச்சு எப்படியாவது சிங்கப்பூர் அனுபவத்தை தொகுத்து எழுதி முடிச்சிடனும்னு திட்டமிட்டு எழுதி முடித்தாகிவிட்டது
இந்த தொடர் சீக்கிரம் எழுதி முடிக்க ஒரு காரணம் கடைசியாக சொல்வதாக எழுதி இருந்தேன்.
வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள போகிறேன் என்பதுதான் அது.
அதற்குள் எப்படியாவது எழுதி முடிக்க பார்த்தேன் எழுதியும் முடிச்சாச்சு. என் அளவில் இது மிகப் பெரிய வெற்றி. ஆரம்பத்தில் இருந்து படித்து பின்னோட்டத்திலும் கைபேசி வழியாகவும் தங்களது கருத்தை சொன்னவர்களுக்கு நன்றிகள்.
அடுத்து ஜீவா அக்காவிற்குதான் நன்றி கடன் பட்டிருக்கேன். அவர் செய்யும் உதவிக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்பது தெரியவில்லை. நன்றி அக்கா. நீங்கள் இல்லை என்றால் வலை உலகில் நான் இல்லை.
*
சிங்கப்பூர் பயணம் எனக்கு உணர்த்தியது:
ஒரு பயணம் மனநிலையையும் உடல்நிலையையும் மாற்றியமைக்கும் சக்திவுடையது என்கிறபோது நிச்சயம் அடுத்தடுத்த பயணம் மேற்கொள்ள ஆர்வம் பிறந்தது.
முந்தைய பாகங்கள் படிக்க:
1. சிங்கப்பூருக்கு!
2. ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி?
3. சென்னை விமான நிலைய அனுபவங்கள்.
4. விமான பயண அணுபவம்.
5. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.
6. சிங்கப்பூரில் முதல் மெட்ரோ பயணம்
7. சிங்கப்பூரில் நெகிழ்ச்சியான இரவு அனுபவம்!
8. சிங்கப்பூர் பயணம் - (நாள் 1)
9. சிங்கப்பூர் பயணம் - (நாள் 2)
10. சிங்கப்பூர் பயணம் - (நாள் 3)
11. சிங்கப்பூர் பயணம் - (நாள் 4)